திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
பூதத்தின் படையர் பாம்பின்
    பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்
    கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த ஓசைக்
    கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
1
காலையிற் கதிர்செய் மேனி
    கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையின் மதியஞ் சேர்ந்த
    மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
    அண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையின் அமுதர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
2
வருந்தின நெருநல் இன்றாய்
    வழங்கின நாளர் ஆற்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்
    கியம்பினர் இருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பால்
    பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
3
நிலையிலா வூர்மூன் றொன்ற
    நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்
    கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த என்பும்
    தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
4
மறையிடைப் பொருளர் மொட்டின்
    மலர்விழி வாசத் தேனர்
கறவிடைப் பாலின் நெய்யர்
    கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
    பிணையல்சேர் சடையுள் நீரர்
விறகிடைத் தீயர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
5
எண்ணகத் தில்லை அல்லர்
    உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற்
    பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரில்
    நால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
6
சந்தணி கொங்கை யாளோர்
    பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை
    தந்தையு மாய ஈசர்
அந்தியோ டுதயம் அந்த
    ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
7
நீற்றினை நிறையப் பூசி
    நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநா ளொன்று
    குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
    யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
8
சித்திசெய் பவர்கட் கெல்லாஞ்
    சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
    பறைப்பவர் இறப்பி லாளர்
முத்திசை பவள மேனி
    முதிரொளி நீல கண்டர்
வித்தினில் முளையர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
9
தருக்கின அரக்கன் தேரூர்
    சாரதி தடைநி லாது
பொருப்பினை யெடுத்த தோளும்
    பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
    நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொருங் கொடுப்பர் வீழி
    மிழலையுள் விகிர்த னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்
வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
    வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்
    திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்
    மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
1
அந்தமும் ஆதியு மாகிநின்
    றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்
    றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்
    ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
2
அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
    அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்
    கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்
    ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
3
தீத்தொழி லான்றலை தீயிலிட்
    டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை
    யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்
    ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
4
தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
    சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்
    என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்
    இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
5
கண்டியிற் பட்ட கழுத்துடை
    யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்
    தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்
    உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
6
தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
    டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி
    மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
    பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
7
சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்
    சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை
    யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்
    மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
8
பிள்ளையிற் பட்ட பிறைமுடி
    யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
    விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்
    பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
9
கறுக்கொண் டரக்கன் கயிலையைப்
    பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
    யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்
    விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்
    என்னைக் குறிக்கொண்மினே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com